Saturday, March 05, 2011

வைட்டமின் ‘B’

உடலுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் ‘B’ பற்றி அறிந்து கொள்வோம்

வைட்டமின் ‘B’ நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்தாகும். உடலின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் இதன் பங்கு அதிகம். வைட்டமின் ‘B’ கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன.

வைட்டமின் ‘B1’ (Thiamine)

வைட்டமின் ‘B2’ (Riboflavin)

வைட்டமின் ‘B3’ (Niacinamide)

வைட்டமின் ‘B5’ (Pantothenic acid)

வைட்டமின் ‘B6’ (Pyridoxine)

வைட்டமின் ‘B7’ (Biotin)

வைட்டமின் ‘B9’ (Folic acid)

வைட்டமின் ‘B12’ (Cyanocobalamin)

வைட்டமின் ‘B’ ன் பொதுவான பயன்கள்

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

எலும்பு, தசை இவற்றின் உறுதிக்கு வைட்டமின் ‘B’ பயன்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

மூளையின் சுறுசுறுப்புக்கும், செயல்பாட்டிற்கும் வைட்டமின் ‘B’ அதிகம் உதவுகிறது.

நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி செயல்பட வைக்கிறது. இரத்த சோகை எனும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

உணவு செரிமானத்தில் அதிக பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீர்களை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. அறிவு வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் அதிகம் உதவுகிறது.

வைட்டமின் ‘B1’

இந்த உயிர்ச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புகளை நீக்கி பலம் கொடுக்கிறது. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. இந்த உயிர்ச்சத்து மனித உடலுக்கு தினமும் 50 மி.கி. அளவு தேவைப்படுகிறது. அதற்கு அதிகமானால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட வைட்டமின் ‘ஆ1’ கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, உருளைக் கிழங்கு, முட்டை, ஆரஞ்சு இவற்றில் அதிகளவு உள்ளது. அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B2’

உடல் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இது நுண்ணூட்டச் சத்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. சராசரியாக ஒரு மனிதன் தினமும் உணவின் மூலம் 1.2 மி.கி. அளவு உட்கொள்ள வேண்டும். வைட்டமின் ‘ஆ2’ பால், வெண்ணெய், முட்டை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, தக்காளி, காளான் மற்றும் மஞ்சள் நிறங்கொண்ட பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B3’

இது மனித உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தாகும். தினமும் 40 மி.கி. – 50 மி.கி. அளவு உடலுக்குத் தேவைப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உண்ட உணவு செரிப்பதற்கும், அவற்றிலுள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மன அழுத்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. நினைவாற்றலை அதிகரிக்கும். இவை புரதச் சத்து நிறைந்த உணவுகளில் அதிகம் காணப்படுகிறது.

முட்டை, பால், நெய், சோயா பீன்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B5’

இவை சருமத்தைப் பாதுகாப்பதுடன், தலைமுடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் உயிர்ச்சத்தாகும். நரம்புகளை வலுப்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. உடலில் இன்சுலின் அளவை சீராக சுரக்கச் செய்து, சர்க்கரை நோயிலிருந்து விடுபட வைக்கிறது. இது பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளில் அதிகம் உள்ளது. நன்கு வேகவைத்த உணவுகளில் இச்சத்து வெளியேறி விடுகிறது.

வைட்டமின் ‘B6’

மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. இவை காய்கறிகள், வாழைப்பழம், முந்திரி, பாதாம் பருப்பு, இவைகளில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B7’

கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பச்சைக் கீரைகள், சமைக்காத உணவுகள் மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B9’

செல்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரும்புச்சத்தை உறிஞ்ச முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தச் சோகையைப் போக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. இந்த உயிர்ச்சத்து மீன்களில் அதிக அளவு உள்ளது. பழங்கள், காய்கறிகள், கீரைகளிலும் உள்ளது.

வைட்டமின் ‘B12’

மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கவும், ரத்தச் சோகையைப் போக்கவும் இந்த உயிர்ச்சத்து மிகவும் பயன்படுகிறது.

நரம்பு மண்டலத்தை சிராக்கி செயல்பட வைக்கிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், வேகவைக்காத உணவுகள், மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

வைட்டமின் ‘B1’

வைட்டமின் ‘B1’ குறைபாட்டால் பெரி பெரி என்ற நோய் உண்டாகிறது.

உடலின் எடை குறைந்து போகும். நரம்புகளின் செயலிழப்பு காரணமாக கை, கால் மறத்துப் போகும். உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி சோர்வாகும். உடல் எப்போதும் சோர்வுடனேயே இருக்கும். இரத்தச் சோகை ஏற்படும். சருமத்தில் அதிக சுருக்கங்கள் தோன்றும். நகங்கள் வெளுத்து காணப்படும். விரல், மணிக்கட்டுப் பகுதிகளில் வலி ஏற்படும். இதய துடிப்பானது சில நேரங்களில் அதிகரித்தும், சில நேரங்களில் குறைந்தும் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்.

வைட்டமின் ‘B2’

வைட்டமின் ‘B2’ குறைந்தால் நாக்கு வெடித்து காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அடிக்கடி ஜலதோஷம், தும்மல் உண்டாகும்.

வைட்டமின் ‘B3’

வைட்டமின் ‘B3’ குறைந்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். நினைவாற்றல் குறையும். சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படும். பெல்லகரா (Pellgra) என்ற நோயின் பாதிப்பு உண்டாகும்.

வைட்டமின் ‘B5’

வைட்டமின் ‘B5’ குறைந்தால் சரும பாதிப்பு உண்டாகி,சருமத்தில் புண்கள் ஏற்படும். தோலில் சுருக்கம் உண்டாகும். தலைமுடி உதிர்தலும் இதன் குறைபாடுதான். சர்க்கரை வியாதி உண்டாக வாய்ப்புள்ளது.

வைட்டமின் ‘B6’

வைட்டமின் ‘B6’ குறைந்தால் இரத்தச் சோகை ஏற்படும். பற்கள் உறுதியிழக்கும். மன அழுத்தம் உண்டாகும். அதிக தாகம், இரத்த அழுத்தம் உண்டாகும்.

வைட்டமின் ‘B7’

வைட்டமின் ‘B7’ குறைந்தால் கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் சிறுகுழந்தைகள் வரை வளர்ச்சி பாதிக்கப்படும்.

வைட்டமின் ‘B9’

வைட்டமின் ‘B9’ போலிக் அமிலக் குறைபாட்டில் தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இரத்த சோகை உண்டாக்கும். மூளை அதிக சோர்வடைந்து ஞாபக சக்தியைக் குன்றச் செய்யும்.

வைட்டமின் ‘B12’

வைட்டமின் ‘B12’ குறைபாட்டால் இரத்தசோகை உண்டாகும், நரம்புத் தளர்வு உண்டாகும். நினைவாற்றல் குறையும். பெரும்பாலும் இந்நோய் முதியவர்களை அதிகம் தாக்கும். சில சமயங்களில் பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

வைட்டமின் ‘B’ சத்து குறைவு சோதனை மூலம் கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இயற்கை முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியம் பெறலாம்.